புதிய தலைவர் நியமனத்தை அறிவித்துள்ள SMIB

அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB), அதன் புதிய தலைவராக ஜோசப் சூசைதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜோசப் சூசைதாசனின் நியமனம் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதில் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான SMIB இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. கடந்த ஒன்பது தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான, அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கி எனும் வகையில், SMIB ஆனது இலங்கையில் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் நிதித் தேவைகளுக்கு சேவை வழங்குவதில் அதன் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.

புதிய தலைவரின் நியமனம் குறித்து அரச ஈட்டு, முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர் துஷார அசுரமான்ன கருத்துத் தெரிவிக்கையில், “சூசைதாசன் எமது புதிய தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம், எமது வங்கி சிறந்த பாதையில் வழிநடத்தாப்படுவதற்கும், ஒத்துழைப்பு, புத்தாக்கம், வெற்றியின் கலாசாரத்தை வளர்ப்பதற்குமான அவரது பங்கு முக்கியமானது என நான் நம்புகின்றேன். அவரது வழிகாட்டலின் கீழ், எமது வங்கி வளர்ச்சியடைந்து மேலும் புதிய உயரங்களை எட்டும் என்பதோடு, வங்கியின் அனைத்து பிரிவிலும் டிஜிட்டல் மாற்றத்தை செயற்படுத்தும் என நான் நம்புகிறேன்.” என்றார்.

ஜோசப் சூசைதாசன், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆடை உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் 26 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு சிறந்த நிபுணத்துவம் வாய்ந்தவர். UK, பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர் எனும் வகையில் ஜோசப் சூசைதாசன், Timex & Fergasam Group மற்றும் L.M.Collections (Pvt) Ltd, தான்சானியாவில் உள்ள Star Apparels (T) Limited ஆகியவற்றில் பொது முகாமையாளர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். அவர் பிலிப்பைன்ஸில் உள்ள KPMG, USAID, Prime Exponents Inc போன்ற பிரபல நிறுவனங்களில் முகாமைத்துவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். முகாமைத்துவ கணக்கியலில் ஜோசப் சூசைதாசனின் விரிவான நிபுணத்துவமானது, நிறுவனங்களுக்கு பெறுமதியான நுண்ணறிவு மற்றும் வழிகாட்டலை வழங்குவதற்கான கருவியாக உள்ளதோடு, நிறுவனங்களுக்கு நிதிச் செயற்றிறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுகிறது. ஆடை உற்பத்தி மற்றும் ஓய்வுத் துறையில் அனுபவம் வாய்ந்த ஜோசப் சூசைதாசன், நிதி முகாமைத்துவம், வணிக ஆலோசனை, மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றில் மதிப்புமிக்க நிபுணத்துவத்தை SMIB இற்கு வழங்குவார். இது நிறுவனத்தின் வளர்ச்சி, வெற்றி, மேம்பாட்டிற்கு விலைமதிப்பற்ற சொத்தாகும்.

இந்த நியமனமானது SMIB இற்கு ஒரு முக்கிய தருணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கி அதன் பல்வேறுபட்ட வாடிக்கையாளர் தளத்தின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கி, தனது கிளை வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் திறன்கள் உள்ளிட்டவற்றை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கின்றது.

SMIB இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோசப் சூசைதாசன் இந்த நியமனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மதிப்புமிக்க நிறுவனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்றமை உண்மையிலேயே பெருமையளிக்கிறது. எமது உடனடி போட்டியாளர்களுக்கு இணையான வகையில் தயாரிப்புகள் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை மேலும் அதிகரிக்க நான் எதிர்பார்க்கிறேன். விவசாயம், கால்நடை, மீன்வளம் ஆகிய முக்கிய துறைகளிலான நிபுணத்துவத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் எமது வங்கியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கிறேன். வளர்ச்சிக்கான ஊக்கியாக தொழில்நுட்ப முன்னேற்றத்தை தழுவுதல், முறையான மாற்றங்களை அடையாளம் கண்டு செயற்படுத்துதல் உள்ளிட்டவையும் இதில் உள்ளடங்குகின்றன. இந்த மதிப்பிற்குரிய நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்து, அதைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கும், நிதித் துறையில் ஒரு முக்கிய பங்காளியாக அதனை நிலைநிறுத்துவதற்கும் உதவுவது ஒரு பாக்கியமாகும்.” என்றார்.

SMIB அதன் வாடிக்கையாளர்களுக்கு ஈட்டு வசதியுடன் கூடிய வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், EPF கடன்கள் மற்றும் வாகனக் கடன் வசதிகளை வழங்குவதில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அதன் 25 கிளைகளுடன் கூடிய வலையமைப்புடன், SMIB தனது டிஜிட்டல்-செயற்படுத்தப்பட்ட கிளைகளை விரிவுபடுத்தத் தயாராக உள்ளது. இது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, தடையற்ற வங்கியியல் அனுபவத்தை உறுதி செய்யும்.

SMIB மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை https://www.smib.lk/ பார்வையிடவும்.

END

Image caption:

SMIB இன் தலைவர் ஜோசப் சூசைதாசன்
SMIB இன் CEO துஷார அசுரமான்ன
Share

You may also like...