‘Beyond Ordinary’ ஆலோசனை முயற்சி ஊடாக குருணாகல் நகருக்கு வணிக நுண்ணறிவுகளை வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank – NTB) அண்மையில் குருணாகலில் அதன் ‘Beyond Ordinary – Nations Business Advisory’ நிகழ்வை முன்னெடுத்திருந்தது. நாடு மேலதிக பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்க தயாராகி வரும் வேளையில், பிராந்தியத்திலுள்ள வணிகச் சமூகத்திற்கு சரியான நேரத்தில் நுண்ணறிவுமிக்க வழிகாட்டல்களை வழங்குவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர், வணிக நிறுவனங்களுக்கு தற்போதைய உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தை துறைகள் பற்றிய புரிதலை இக்கலந்துரையாடல் வழங்கியதுடன், அதிகரித்து வரும் வாய்ப்புகளை நம்பிக்கையுடன் கையாள்வதற்கான அறிவையும் அவர்களுக்கு வழங்கியது.
மாறிவரும் உலகளாவிய சூழலில் இலங்கையின் பேரண்ட பொருளாதார பாதை குறித்த முக்கிய உரையை Advocata Institute நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெனாண்டோ இங்கு வழங்கியிருந்தார். சமீபத்திய நிதிச் சீர்திருத்தங்கள் மூலம் எட்டப்பட்ட முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டியதுடன், நாடு வளர்ச்சி சார்ந்த பொருளாதாரப் பாதையை நோக்கி நகர்வதையும் வலியுறுத்தினார். இது வணிகங்கள் தமது அளவை விரிவுபடுத்தவும், போட்டித்திறனை அதிகரிக்கவும், புதிய சந்தைகளுக்குள் பிரவேசிக்கவும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வர்த்தக வங்கியியல் பிரிவின் நிறைவேற்று உப தலைவர் அரோஷ லியனாராச்சி, RTA Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளரும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் (CA Sri Lanka) சபை உறுப்பினருமான சமன் ஸ்ரீ லால், Advocata Institute நிறுவனத்தின் தனநாத் பெனாண்டோ ஆகியோர் பங்குபற்றிய குழுக் கலந்துலையாடலும் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், வருமான ஈட்டலுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதில் கவனம் செலுத்தி, எதிர்வரும் வரிச் சீர்திருத்தங்களின் தாக்கங்கள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், அதிகரித்து வரும் சிக்கலான வணிகச் சூழலில் வணிக நிறுவனங்கள் செலவுகளை கட்டமைக்கவும், செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், போட்டித் திறனை தக்கவைக்கவும் தேவையான நடைமுறை ரீதியான உத்திகளை இக்குழுவினர் வழங்கினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அரோஷ லியனாராச்சி, “இலங்கை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், மாற்றங்களை நம்பிக்கையுடன் கையாளுவதற்கு வணிக நிறுவனங்களுக்கு சரியான நுண்ணறிவுகள் அவசியமாகின்றன. ‘Beyond Ordinary’ ஊடாக, அதிகரித்து வரும் வாய்ப்புகளை பெறுவதற்குத் தேவையான தெளிவையும் முன்னோக்கையும் வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் குருணாகல் போன்ற பிராந்தியங்களில் உள்ள வணிகச் சமூகங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவையும் நாம் வழங்குகிறோம்.” என்றார்.
‘Beyond Ordinary’ முயற்சியானது, நாடு முழுவதும் உயர்தரமான ஆலோசனைக்கான ஈடுபாடுகளை விரிவுபடுத்துவதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கொண்டுள்ள முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் குருணாகல் போன்ற பிராந்தியங்களில் உள்ள வணிக மையங்கள் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்களுடன் இணைந்த பொருத்தமான மற்றும் செயற்படுத்தக்கூடிய வகையிலான நுண்ணறிவுகளை அணுகுவதை வங்கி உறுதி செய்கிறது. இந்தத் தளத்தின் ஊடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தன்னை இலங்கை வணிகங்களின் நம்பகமான பங்காளியாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பாரம்பரிய வங்கியியலுக்கு அப்பால், தகவலறிந்த முடிவெடுத்தல் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கும் அர்த்தமுள்ள, எதிர்காலத்திற்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குகிறது.
நுகர்வோர், வர்த்தக மற்றும் வணிக நிறுவன பிரிவுகளில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழிகளின் ஊடாக வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள் மூலம் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி சேவையாற்றி வருகிறது. அதிநவீன டிஜிட்டல் வங்கித் தொழில்நுட்பங்கள் ஊடாக டிஜிட்டல் வலுவூட்டலில் வங்கி கவனம் செலுத்துகிறது. இலங்கையில் American Express அட்டைகளை வழங்குகின்ற மற்றும் அதன் ஏக உரிமை கொண்ட ஒரே நிறுவனமாக NTB திகழ்வதுடன், உயர் ரக சந்தைப் பிரிவுகளில் சந்தை தலைமையையும் வகித்து வருகிறது.

Recent Comments