கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி 2019/20 நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

  • வரிக்குப் பிந்திய இலாபம் 29% இனால் அதிகரித்துள்ளதுடன் துறையின் சிறந்த NPL பெறுமதியைத் தக்க வைத்துள்ளது
  • ICRA இனால் ‘A’உறுதியான தரப்படுத்தல்
  • LMD இனால் 2019/20 காலப்பகுதியின் சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தல்

2019/20 நிதியாண்டில் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி (CLC) உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. சவால்கள் நிறைந்த ஆண்டிலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்றி நிதியாண்டைப் பூர்த்தி செய்திருந்தமை விசேட அம்சமாகும். அதன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை மேலும் உறுதி செய்யும் வகையில் ICRA லங்கா லிமிடெட்டினால் SL (A) உறுதியான தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனூடாக நிறுவனத்தின் நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை போன்றவற்றுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில், டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக நுண் சேமிப்புகளை ஏற்றுக் கொள்வதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகத் தெரிவாகியிருந்தமையும் விசேட அம்சமாகும்.

நிதிப் பெறுபேறுகள்

வரிக்குப் பிந்திய இலாபமாக 1547 மில்லியன் ரூபாயை CLC பதிவு செய்திருந்தது. இது முன்னைய நிதியாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1198 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் 29 சதவீத அதிகரிப்பாகும். நிதியங்களின் செலவு 8 சதவீதத்தால் குறைந்திருந்ததுடன், உபரிச் செலவுகள் (overheads) 12 சதவீதத்தால் குறைந்திருந்தது. தொழிற்படாக் கடன்களின் (NPL) பெறுமதி 7.05 சதவீதமாக காணப்பட்டதுடன், துறையின் NPL பெறுமதி 11 சதவீதத்தை விட உயர்வாக பதிவாகியிருந்தது. 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, CLC துரிதமாக மீட்சியைப் பதிவு செய்திருந்ததில் அதன் இலாகா இருப்புகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. இதில் 95 சதவீதத்துக்கும் அதிகமான சொத்துக்களை பின்புலமாகக் கொண்ட தீர்வுகள் அடங்கியுள்ளதுடன், எழக்கூடிய ஏதேனும் தாக்கங்களை தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தன.

சவால்கள் நிறைந்த ஆண்டு

CLC இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரிஷான் திலகரட்ன கருத்துத் தெரிவிக்கையில், ”2019/20 நிதியாண்டு என்பது எமது வாழ்நாளில் நாம் எதிர்கொண்டிருந்த மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு நிதியாண்டாக அமைந்துள்ளது. முதல் 2019 ஏப்ரல் மாதத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வருட நிறைவில் பொருளாதாரம் மீண்டெழ முனையும் சந்தர்ப்பத்தில், கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்து மேலும் சவாலை தோற்றுவித்திருந்தது. எவ்வாறாயினும் சவால்கள் நிறைந்த சூழலிலும், முன்னைய ஆண்டுக்கு நிகரான நிதிப் பெறுபேறுகளை CLC பேணியிருந்ததுடன், வரிக்குப் பிந்திய இலாபப் பெறுமதிகளை மேம்படுத்தியிருந்தது. துறையின் NPL பெறுமதி அதிகரித்த போதிலும், எமது NPL பெறுமதியை குறைந்தளவில் பேண முடிந்திருந்தது.” என்றார்.

திலகரட்ன தொடர்ந்து குறிப்பிடுகையில், ”2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் துறையில் தளம்பல் நிலை காணப்பட்ட போதிலும், CLC தொடர்ந்தும் தனது வாடிக்கையாளர் இருப்புக்கு நேர்மையானதாக செயலாற்றும் வகையில், எமது நிதிச் சேவைகளை சகல வேளைகளிலும் அணுகக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தோம். கடன் இலாகாக்களை சீராக பேணியிருந்ததுடன், உபரிச் செலவுகளை கட்டுப்பாட்டினுள் கொண்டிருந்தமையால் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்ய முடிந்தது. வைப்பாளர்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கையை CLC கட்டியெழுப்பியுள்ளதுடன், வைப்பாளர்களின் பெறுமதி 25 பில்லியன் ரூபாயாக அதிகரித்து, மொத்த நிதியளிப்பின் 52 சதவீதத்தைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் இதர நிதியளிப்பு மூலங்களில் DFI பெறுகைகள், வங்கி நிதியளிப்புகள், மூலதனச் சந்தைத் தீர்வுகள் மற்றும் முழு அளவிலான கடப்பாட்டு தீர்வுகள் போன்றன அடங்கியுள்ளன. CLC இன் தகைமைப் பெறுமதி Tier 1 மூலதனத்தில் ரூ. 17 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த மூலதன போதுமை கடப்பாடுகளை விட உயர்வானதாக அமைந்திருந்தது. இதனூடாக, நாட்டில் காணப்படும் அதிகளவு மூலதன இருப்பைக் கொண்டுள்ள நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக CLC திகழ்ந்திருந்தது.” என்றார்.

வேகமாக வளர்ந்து வரும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எதிர்காலத்தில் தங்கக் கடன்கள், இஸ்லாமிய நிதி வசதிகள் மற்றும் நுண் நிதிச் சேவைகளினூடாக வளர்ச்சியை பதிவு செய்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. CLC தனது தங்கக் கடன் அடகுச் சேவையை முன்னைய நிதியாண்டில் ஆரம்பித்திருந்ததுடன், தற்போது தனது 65 கிளைகளின் 55 கிளைகளுக்கு விஸ்தரித்துள்ளது.

திலகரட்ன மேலும் விவரிக்கையில், ” CLC இன் நிதிப் பெறுபேறுகளை சாராம்சப்படுத்துவதாயின், எனது தொழில் வாழ்க்கையில் நான் முகங்கொடுத்திருந்த மிகவும் சவால்கள் நிறைந்த நிதியாண்டு என கடந்த நிதியாண்டைக் குறிப்பிட முடியும். தாய் நிறுவனமான LOLC இன் உறுதியான உதவியுடனும், அதன் கம்போடியாவின் துணை நிறுவனமான Prasac Microfinance லிமிடெட்டை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தமையினாலும், ICRA லங்காவிடமிருந்து  ‘A’ நிலையானது எனும் தரப்படுத்தலை நிறுவனம் பேணியிருந்தது. Prasac நிறுவனத்தின் விற்பனை என்பது இலங்கை நிறுவனமொன்று, வெளிநாடொன்றில் மேற்கொண்டிருந்த மாபெரும் கொடுக்கல் வாங்கல்களில் ஒன்றாக பதிவாகியிருந்ததுடன், தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பதிவாகியிருந்தது.” என்றார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிப்படைந்திருந்த வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் சுமார் 59000 கடன் மீளச் செலுத்தல் சலுகைக் கால வசதியை CLC வழங்கியிருந்ததாக திலகரட்ன குறிப்பிட்டார். அத்துடன், வாடிக்கையாளர்கள் வைப்புகளிலும் பெருமளவு அதிகரிப்பை நிறுவனம் பதிவு செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனூடாக நிறுவனத்தின் பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

எதிர்காலம் பற்றி திலகரட்ன குறிப்பிடுகையில், ”நிறுவனங்கள் எவ்வாறு உள்ளக மற்றும் வெளியக பங்காளர் உறவுகளை பேணுகின்றன, கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகள் மற்றும் தொடர்பாடல் மற்றும் வர்த்தக நாமச் செயற்பாடுகள் என்பவற்றைப் பொறுத்து இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியை எவ்வாறு கடந்து செல்லும் என்பது அமைந்திருக்கும். உறுதியான ஐந்தொகைகளை கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, தமது வியாபார மாதிரிகள், செலவுகள் மற்றும் மேலதிகமான கட்டமைப்புகள் மற்றும் பாரம்பரிய வருமான மூலங்கள் மற்றும் மூலதன போதுமை போன்றவற்றை சவால்களுக்குட்படுத்தி கேள்விக்குட்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளதுடன், அதனூடாக இந்த உறுதியற்ற காலப்பகுதியை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த சகல பிரிவுகளிலும் CLC சிறப்பாக செயலாற்றிய வண்ணமுள்ளதுடன், துறையில் கொண்டுள்ள முன்னிலையை பேணுவதுடன், தனது கடன் தரப்படுத்தலை தக்கவைத்து மேலும் முன்னேற்றங்களை பதிவு செய்யும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன்.” என்றார்.

CLC இன் வர்த்தக நாம பெறுமதியை மேலும் மேம்படுத்தும் வகையில், 2019/20 காலப்பகுதிக்கான சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக நிறுவனம் தரப்படுத்தப்பட்டிருந்தது. இதனூடாக, இலங்கையில் காணப்படும் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக பொது மக்கள் மத்தியில் உயர் வரவேற்பைப் பெற்றுள்ளமையைப் பிரதிபலித்துள்ளது.

தொலைநோக்குடைய தலைமைத்துவம்

CLC இன் தவிசாளர் பிரியந்த பெர்னான்டோ CLC இன் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பான தனது சீரான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருக்கையில், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் அதிர்ஷ்டம் என்பது பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளன. வெளியகத்திலிருந்து எழும் எந்தவொரு இடையூறுகளும் சவால்களை தோற்றுவிக்கக்கூடியன. 2016 ஆம் ஆண்டு முதல், பல வெளியக இடையூறுகளுக்கு நாம் முகங்கொடுக்க நேரிட்டது. குறிப்பாக காலநிலை மாற்றங்கள், 2019 ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தொற்றுப் பரவல் போன்றன பொருளாதாரத்தில் தாக்கத்தை தோற்றுவித்திருந்தன. நிதிச் சேவைகளை வழங்கும் துறை அதிகளவு வலியை உணர்ந்திருந்தன. எவ்வாறாயினும், கடந்த நிதியாண்டில் CLC சிறந்த நிதிப்பெறுபேறுகளை பதிவு செய்துள்ளமை எனக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக NPL பெறுமதியைக் குறைவாகப் பேணி, ‘A’ தரப்படுத்தலை ICRA லங்காவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்தமை பாராட்டுதலுக்குரியவை. பல நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினதும், வங்கிகளினதும் தரப்படுத்தல்கள் குறைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எமது கடன் தரப்படுத்தல் மீள உறுதி செய்யப்பட்டிருந்தமையினூடாக, சிறந்த சாதனையை வெளிப்படுத்தியிருந்தது.” என்றார்.

சவால்கள் நிறைந்த ஆண்டை கவனத்தில் கொண்டு, CLC இன் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், நிறுவனத்தின் செயற்பாடுகளுடன் நெருக்கமான ஈடுபாட்டைப் பேணியிருந்தனர்.  நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அதன் தாய் நிறுவனமான LOLC இன் உந்துசக்திக்கு மேலாக, அதன் அதிக ஒழுக்கமான அனுபவம் நிறைந்த பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் ஆற்றியிருந்த பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

பெர்னான்டோ தொடர்ந்து குறிப்பிடுகையில், ”எமது வாடிக்கையாளர்கள் ஈடுபாட்டைக் கொண்டிருந்த பல துறைகள் 2019 ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. பல சந்தர்ப்பங்களில், விநியோகத் தொடர்கள் தடைப்பட்டதால், எமது வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்வாதாரங்களை மீட்டுக் கொள்வது சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், கடுமையான சூழல்களை கையாள்வதில் நாம் கொண்டிருந்த அனுபவத்தினூடாக, இவற்றை சமாளிக்க முடிந்தது. டிஜிட்டல் மற்றும் கையாளல் உட்கட்டமைப்புகளை நிறுவனம் கொண்டிருந்ததுடன், பயிற்சி பெற்ற ஊழியர்களினூடாக இடர்களைக் கையாண்டிருந்தது. எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்து, எமது வாடிக்கையாளர்களுக்கு தடங்கல்களில்லாத சேவைகளை நாம் வழங்கியிருந்தோம். தொற்றுப் பரவல் காரணமாக நிலவிய முடக்கல் நிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 66 CLC கிளைகளும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக திறக்கப்பட்டன. முடக்க நிலையின் போது, வாடிக்கையாளர்களுக்கு எமது உயர் டிஜிட்டல் நாளிகைகளினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள நாம் ஊக்குவித்திருந்தோம்.” என்றார்.

CLC இன் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகள் போன்றன பாரியளவு டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களைக் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ,தனால், நிறுவனத்துக்கு முடக்கநிலை நிலவிய காலப்பகுதியிலும், வாடிக்கையாளர்களுக்கு தடங்கல்களின்றி, சௌகரியமாக தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தொடர்பாடல்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தன.

சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் உறுதியான ஐந்தொகையை CLC இனால் பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்பதில் பெர்னான்டோ உறுதியாக உள்ளார். இதனூடாக, கடுமையான காலப்பகுதியை கடந்த பின்னர் நிறுவனத்தின் பெறுபேறுகளை மேலும் துரிதப்படுத்துவதாக அமைந்திருக்கும். ரூ. 100 பில்லியன் கம்பனியாக திகழ்வது எனும் நோக்கத்தின் காரணமாக, எதிர்வரும் ஆண்டுகளில் Tier 1 நிலை நிறுவனமாக தரமுயர்த்தக்கூடியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆரம்ப மட்டங்களில் ஏற்கனவே CLC உறுதியான தாக்கத்தைக் கொண்டுள்ளது. இதனூடாக 80,000 இல்லங்களின் வாழ்க்கையை தொடுகைக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், நுண் நிலையிலிருந்து சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் நிலைக்கு தரமுயர்த்திக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியானது, CLC ஐ மாற்றி யோசிப்பதற்கு வழிகோலியிருந்ததுடன், நிறுவனத்துக்கு வளர்ச்சிக்கான புதிய பிரிவுகளை நாடச் செய்துள்ளது. உதாரணமாக மீன்வளர்ப்பு, நுண் வலுப் பிறப்பிப்பு மற்றும் இதர திட்ட அடிப்படையான கடன் வசதிகள் ஊடாக, புதிய வியாபாரங்களின் வளர்ச்சியை தூண்டுவது மற்றும் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர் இருப்பை விரிவாக்கம் செய்வது பற்றி கவனம் செலுத்துகின்றது. நிறுவனத்தின் தீர்வுகளான தவணைக் கடன்கள், flexicash, இஸ்லாமிய நிதிச் சேவைகள், லீசிங், ஃபக்டரிங் மற்றும் தங்கக் கடன் சேவை மற்றும் சொத்துக்கள் கடன் போன்றன 2019/20 காலப்பகுதியில் நிறுவனத்தின் இலாபப் பெறுமதியில் முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தன.

எதிர்காலம் தொடர்பில் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், ”நடுத்தரளவு காலப்பகுதியில், ‘A’ தரப்படுத்தலில் ஒரு படி முன்னேற்றத்தைப் பதிவு செய்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், ரூ. 100 பில்லியன் நிறுவனமாக திகழ்வது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம். இதனூடாக எமது கடன் தரத்தை பேணுவதுடன், உயர் நியமங்களையும் குறைந்தளவு NPL பெறுமதிகளையும் பேணுவதுடன், பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கி, நுண் வியாபாரங்களை சிறிய, நடுத்தரளவு நிலைக்கு உயர்த்துவது பற்றி கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.

LOLC குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக CLC திகழ்கின்றது. இலங்கையிலுள்ள முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன், தற்போது லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புகள், கடன்கள், flexicash, நுண் நிதியியல், இஸ்லாமிய நிதிச் சேவைகள், தங்கக் கடன்கள் முதல் ஃபக்டரிங் போன்ற சேவைகளை வழங்குகின்றது. உறுதித்தன்மை மற்றும் தங்கியிருக்கும் திறன் போன்றவற்றில் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமாக CLC வளர்ச்சியடைந்துள்ளதுடன், தனது வாடிக்கையாளர் வலையமைப்பினூடாக, நிதி வலுவூட்டலை வழங்கும் பிரதான செயற்பாட்டாளராக செயலாற்றி, நாடு முழுவதிலும் பிரதான தொடுகைப் பகுதிகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.

படங்கள்

1 – கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி தவிசாளர் பிரியந்த பெர்னான்டோ

2 – கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரிஷான் திலகரட்ன

Share

You may also like...